திமிரு, பள்ளிக்கூடம் ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை ஷ்ரேயா ரெட்டிக்கும், நடிகர் விஷாலின் அண்ணன் அஜய்க்கும் (இப்போது விக்ரம் கிருஷ்ணா) மார்ச் 9ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. எஸ்.எஸ்.மியூசிக் டிவியில் வி.ஜேவாக குட்டை பாவடை, டைட் சட்டைகளில் வலம் வந்து இளைஞர்களை இம்சித்துக் கொண்டிருந்த ஷ்ரேயா ரெட்டி, திமிரு படம் மூலம் நடிகையானார். ஈஸ்வரி என்ற கேரக்டரில் படு அடாவடியாக அப்படத்தில் நடித்திருந்த ஷ்ரேயா, ஒரே படத்தில் பிரபல நடிகையாக மாறினார். அதைத் தொடர்ந்து பல படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் வந்தன. ஆனால் எல்லாமே ஈஸ்வரி டைப் ரோல்களாக வந்ததால் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை ஷ்ரேயா. அதேசமயம், வெயில், பள்ளிக்கூடம் ஆகிய படங்களில் வித்தியாசமான ரோல்களில் நடித்துக் கலக்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில், ஷ்ரேயா ரெட்டிக்கும், திமிரு பட நாயகன் விஷாலின் அண்ணனும், முன்னாள் நாயகனுமான விக்ரம் கிருஷ்ணாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் ரெட்டிகள் என்பதால் காதலுக்கு எந்தப் பிரச்சினையும் வரவில்லை. இரு வீட்டாரும் காதலுக்குப் பச்சைக் கொடி காட்டவே, சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து தற்போது திருமண தேதி முடிவாகியுள்ளது. மார்ச் 9ம் தேதி இருவருக்கும் திருமணம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் சென்னை அடையாறு, பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு முதல் நாள், அண்ணா அறிவாலயம் பின்புறம் உள்ள கலைஞர் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருமண ஏற்பாடுகளை இரு வீட்டாரும் இணைந்து மும்முரமாக கவனித்துக் கொண்டுள்ளனர். அஜய் என்ற விக்ரம் கிருஷ்ணாவும் தமிழில் சில படங்களில் நடித்தவர் தான். ஒரு படத்தை இவரது தந்தை தயாரிக்க அதில் அஜய்க்கு ஜோடியாக மாளவிகா நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. பின்னர் அஜய் சினிமாவில் வாய்ப்பில்லாமல் தள்ளாடவே காதல் முடிந்தது. இதையடுத்து இப்போது தயாரிப்பாளராகவும் மாறிவிட்ட அஜய் ஒரு வழியாக ஷ்ரேயா ரெட்டியை கைப்பிடிக்கவுள்ளார்.
|