 வைகோவிற்கு "உதயன்" எத்தனை தொகுதிகள் ஒதுக்கும்? மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குறித்து யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் நாளிதழான "உதயன்" 06.11.07 அன்று வெளியிடப்பட்ட இதழில் ஒரு ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளது. ஈழத் தமிழர் விரோதப் போக்குக் கொண்ட ஜெயலலிதாவிற்கு வால் பிடிப்பதற்கு, உலகத் தமிழர்களுக்கு வைகோ பதில் சொல்ல வேண்டும் என்று உதயன் எழுதியிருக்கிறது. உதயன் வைகோவிடம் இருந்து என்ன பதிலை எதிர்பார்க்கிறது? அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதா? அப்படி விலகினால் விரைவில் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் வைகோவின் கட்சிக்கு உதயன் எத்தனை தொகுதிகளை ஒதுக்கிக் கொடுக்கும்? மதிமுக சார்பில் எத்தனை நாடாளுமன்ற உறுப்பினர்களை வெற்றிபெறச் செய்யும்? இவைகளை உதயன் உலகத் தமிழர்களுக்கு விளக்குமா? ஜெயலலிதா கலைஞரின் ஆட்சியைக் கலைப்பதற்கு ஏதாவது வழி கிடைக்குமா என்று தூங்கும் போதும் சிந்திக்கின்ற ஒருவர். அவர் கலைஞரின் இரங்கல் கவிதையை வைத்து ஒரு சட்டப் பிரச்சனையை கிளப்ப முனைகிறார். இதை கலைஞர் சரியான முறையில் எதிர்கொள்வார். இதற்குள் வைகோவை இழுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜெயலலிதாவாவது சட்டப் பிரச்சனையைத்தான் கிளப்பினார். ஆனால் கலைஞரோடு கூட்டணி அமைத்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியனர் என்ன செய்தனர்? கலைஞர் இரங்கல் தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்தனர். அத்துடன் விட்டார்களா? மனித குலமே வெட்கப்படக்கூடிய ஒரு ஈனச் செயலைப் புரிந்தனர். தமிழ்நாட்டில் சில இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் தமிழ்செல்வனின் வீரச்சாவை இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். இவ்வாறான காட்டுமிராண்டிகளோடு கூட்டணி வைத்திருப்பதற்கு கலைஞர் உலகத் தமிழர்களுக்கு பதில் சொல்வாரா? வேண்டாம். எந்த தமிழ்நாட்டு அரசியல் தலைவரும் தமிழ்நாட்டு அரசியலின் அடிப்படையில் அமைக்கின்ற கூட்டணிகளுக்கு யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம். தமிழ்நாட்டில் இரண்டாவது பலம் வாய்ந்த கூட்டணியில் தமிழீழத்திற்கு ஆதரவான ஒரு கட்சி இருப்பது ஈழத் தமிழர்களுக்கு நன்மையே தவிர, தீமை அல்ல. வைகோ தன்னுடைய தமிழீழ ஆதரவுக் குரலை சற்றும் தொய்வின்றி எழுப்புகின்றார். அவருக்கு ஈழத் தமிழர்கள் நன்றிக் கடன்பட்டுள்ளார்கள். கலைஞரை மகிழ்ச்சிப்படுத்தம் நோக்கில் ஈழத் தமிழ் ஊடகங்கள் வைகோவை புண்படுத்த வேண்டாம். |