சனி பகவான் லாப ஸ்தானத்திலிருந்து விரய ஸ்தானத்தை அடைந்து ஏழரை சனியின் தொடக்கத்தை உண்டாக்குகிறார். ஏழரை சனியின் தொடக்கம் என்றதுமே மனதில் ஒரு கலக்கம் உண்டாவது இயற்கையே. ஆனால் ஏழரை சனி இரண்டாம் சுற்றாக "பொங்கு சனி' என்கிற வகையில் அமைந்தால் நலமே. முதல் மற்றும் மூன்றாம் சுற்று வருபவர்கள் மட்டுமே எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு அனைத்து முயற்சிகளும் சற்று கடினப் பாதையிலேயே செல்லும். புதிய செலவுகள் உண்டாகலாம். ஆரோக்கிய வகையில் சிறு பாதிப்பு உண்டாகும். மற்றவர்களின் அவமரியாதைகளைச் சந்திக்க நேரிடும். பயணங்களால் எதிர்பார்த்த அனுகூலங்களைப் பெற முடியாமல் போகும். சிலர் தூக்கமின்மையால் அவதிப்படுவார்கள். மனதில் குழப்பங்கள் சூழும். தெளிவுகள் இராது. மேலும் கூடுமானவரை கடன் வாங்குவதைத் தவிர்க்கவும். சிலர் மன அழுத்தத்துக்கு உள்ளாகி, மருத்துவச் செலவுகள் செய்ய நேரிடும். உற்றார், உறவினர்களிடம் சரியாகப் பழகாவிட்டால் வீண் அபவாதங்களுக்கு ஆளாக நேரிடலாம். உங்கள் செயல்களில் முழு ஈடுபாட்டுடன் ஈடுபட முடியாமல் போகலாம். இதற்கு மனதை ஒருமுகப்படுத்தும் கலைகளைக் கற்றுக் கொள்ளுங்கள். இறை தியானமும் பயன்தரும். சனி பகவானின் பார்வை உங்கள் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தின் மீது படுவதால், உழைப்பிற்கு ஏற்ற தனலாபங்களைப் பெறுவீர்கள். அடுத்தவர்களுக்கு கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றிவிடுவீர்கள். உங்களை எள்ளி நகையாடியவர்கள் உங்கள் பேச்சுக்கு அடங்கி நடப்பார்கள். அதேநேரம் பணம் எவ்வளவுதான் வந்தாலும், ஒரு தட்டுப்பாடு போன்ற நிலைமை சில நேரங்களில் உண்டாகும். சனிபகவானின் பார்வை ருணம், ரோகம், சத்ரு ஸ்தானத்தின் மீது படுவதால் உங்களின் ஆரோக்கியம் பொதுவாகவே சீராக இருந்து வரும். பெரிய உபாதைகள் என்று எதையும் சந்திக்க மாட்டீர்கள். கடன்களை சரியான நேரத்தில் திருப்பி அடைக்கும் நிலைமை உருவாகும். சனி பகவானின் பார்வை பாக்யஸ்தானத்தின் மீது படுகிறது. இதனால் தந்தை வழி உறவுகள் சீர்படும். வெளிநாடு சென்று வரும் யோகமும் உண்டாகும். தொலை தூரச் செய்திகள் நற்செய்திகளாக வரும். சிலர் புதிய சொத்துக்களை வாங்குவார்கள். எதிர்பாராத வகையில் குரு கடாட்சமும், ஆன்மீகப் பணிகளில் ஈடுபடும் பாக்யமும் உண்டாகும். இதனால் உங்கள் பெயர் பிரபலமும் ஆகும். ஆக்கப்பூர்வமான காரியங்களைச் செய்து, பிறருக்கு ஆலோசனைகளையும் வழங்குவீர்கள். உங்களின் முயற்சிகளுக்கு பெரியோர்களின் ஆசியும், சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்களின் ஆதரவும் கிடைக்கும். உத்யோகஸ்தர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாக இருப்பதால் அவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். அதேநேரம் உங்கள் திறமையில் குறைவு வராது. சக ஊழியர்களிடம் உங்கள் மனதில் உள்ளவைகளைக் கூற வேண்டாம். "நீங்கள் உண்டு, உங்கள் வேலையுண்டு' என்கிற நிலையில் இருந்து வருவதே சிறப்பு. அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். வியாபாரிகள் சற்று பின்னடைவுகளைச் சந்திக்க நேரிடலாம். அதனால் புதிய முயற்சிகளை சோதித்துப் பார்க்காதீர்கள். கூட்டாளிகளும், நண்பர்களும் உங்கள் திட்டத்துக்கு மதிப்பு கொடுக்க மாட்டார்கள். அதனால் அவர்களின் ஆலோசனைகளைப் பெற்ற பிறகே உங்கள் எண்ணங்களைச் செயலாக்கவும். அலைச்சல்கள் உண்டானாலும் இறுதியில் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். விவசாயிகள் மேன்மையான அபிவிருத்தியைக் காண்பார்கள். மகசூல் மனநிறைவு தரும். குடும்பத்தில் சுபச்செயல்களைச் செய்து மகிழ்வீர்கள். புழு, பூச்சிகளால் மகசூலில் சிறிது பாதிப்பு உண்டாக வாய்ப்பு உள்ளதால், பூச்சிக் கொல்லிகளை சரியான நேரத்தில் பயன்படுத்தவும். நீர்ப்பாசன வசதிகளில், குறிப்பாக கிணறுகளில் தூர் எடுத்து பாசன வசதிகளில் குறைவு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவும். அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளை ஏற்றுக் கொள்வார்கள். புதிய உத்வேகத்துடன் உங்கள் வேலைகளைச் செய்வீர்கள். வழக்குகளில் எதிர்பாராத வெற்றிகளைக் காண்பீர்கள். தொண்டர்களால் எதிர்பாராத சிக்கல்கள் உண்டானாலும், அவற்றை சாதுர்யத்துடன் சமாளிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கட்சிமேலிடத்தின் அனுமதியுடன் வெளிநாட்டுக்குப் பயணப்படுவீர்கள். கலைத்துறையினர் திறமைகேற்ற புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். கடின உழைப்பை மேற்கொள்வீர்கள். சக கலைஞர்களுடன் நீங்கள் இணைந்து புதிய பாணியில் கலை நிகழ்ச்சிகளை நடத்தி, புகழை உயர்த்திக் கொள்வீர்கள். பண வசதி சரளமாக இருக்கும். அதேநேரம் எவருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். பெண்மணிகள் தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார்கள். உடல் நலம் சீர்பெறும். குடும்பத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். அதேநேரம் உறவினர்களிடம் அவர்களுக்கு ஏற்றமாதிரி பேசி, உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவும். தம்பதிகளிடையே அன்பு நீடிக்கும். குடும்பத்தில் சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். மாணவமணிகளுக்கு மகிழ்ச்சி நீடிக்கும். பெற்றோர்களால் எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள். அதேநேரம் உழைத்துப் படித்து மதிப்பெண்களைப் பெற வேண்டும்.விளையாட்டில் விபத்து ஏற்படாமல் கவனத்துடன் ஈடுபடவும். |