 தேவையற்ற, அனாவசியமான, பெயர் தெரியாத இ-மெயில்களை (Spam) நாம் தினந்தோறும் எதிர்கொண்டு வருகிறோம். ஒன்று இந்த மெயில்களில் வைரஸ் இருந்து உங்கள் சொந்த கணினியாக இருந்தால் அதனையோ அல்லது நெட்வொர்க்குடன் இணைந்திருந்தால் நெட்வொர்க் மூலமாக அனைத்து கணினிகளையோ செயலிழக்கச் செய்யும். ஆனால் அத்தகைய வைரஸ் ஸ்பாம் மெயில்களிலிருந்து தற்காத்துக் கொள்ள ஏகப்பட்ட தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. தற்போது உள்ள போக்கு என்னவெனில் இந்த ஸ்பாம் மெயில்கள் உண்மையான மெயில்கள் போலவே ஏதாவது நிறுவனத்தின் பெயரில் வருவது வழக்கமாகியுள்ளது. இதில் வரும் அறிவிப்புகளை நம்பி ஏமாறுபவர்களும் அதிகமாகி வருகின்றனர். நமக்கு வரும் இ-மெயில்களில் உருப்படியான அல்லது தெரிந்தவர்களின் மெயில் 20 சதவீதமாகவும், இதுபோன்ற தொல்லை ஸ்பாம் மெயில்களின் வரத்து 80 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இதனால் இன்டர்நெட் பேண்ட் வித் (Band Width) கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. மேலும் இ-மெயில்களில் பாதியை வெறும் குப்பைக் கூளமாக மாற்றி வருகிறது. இந்த ஸ்பாம் மெயில்களில் தற்போது புழக்கத்தில் இருக்கும் ஒரு மோசடி இ-மெயில் "பம்ப் அண்ட் டம்ப்" என்ற பெயரில் வரும். அதாவது லட்சக்கணக்கான ஸ்பாம் மெயில்கள் ஊர் பேர் தெரியாத நிறுவனங்களின் பங்குகளை விளம்பரம் செய்யும். இதில் அந்த ஸ்பாம் மெயில் ஆசாமிகள் பங்குகளை வாங்கியிருப்பார்கள். இதைப் பார்க்கும் "அப்பாவி" அல்லது "பேராசை"க்காரர்கள் மேற்சொன்ன இந்த போலி ஆசாமிகளின் விளம்பர வலையில் விழுந்து விடுவார்கள். பங்குகளை வாங்க ஆர்டர் செய்வார்கள். இதனால் அந்த நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் விலை அதிகரிக்கும். அதாவது அவர்கள் மொழியில் கூறுவதென்றால், "பம்ப்" ஆகிவிடும். விலைகள் உயர்ந்தவுடன் இந்த ஸ்பாம் ஆசாமிகள் தங்களிடம் வைத்துள்ள பங்குகளை விற்று "டம்ப்" செய்வார்கள். ஆனால் உண்மையில் பங்குகளின் விலை சரியும்... முதலீட்டாளர்கள் பணம் அம்போதான். ஆனால் நம் இ-மெயில் ஆசாமிகளில் பலர், ஏன் ஒரு முகம் தெரியாத நபர் பங்குச் சந்தை பற்றி டிப்ஸ் கொடுக்கவேண்டும்? ஏன் இந்த இ-மெயில் நமக்கு வருகிறது? இதன் பின்னணி என்ன? என்று யோசிப்பதேயில்லை. மோசடியான இந்த வலையில் சிக்கி தான் பாடுபட்டு சேர்த்த பணத்தை இழக்கிறார்கள். டிசம்பர் 26, 2004 எப்படி சுனாமி பேரலைகள் தெற்காசிய கடற்கரைகளைத் தாக்கி அப்பாவி உயிர்களை பலி வாங்கியதோ, கடந்த ஆகஸ்ட்-8ம் தேதி இதுபோன்ற பங்கு வர்த்தக ஊழலைச் செய்வதற்காக ஸ்பாம் மெயில்கள் சுனாமி போல் எழுந்தது. சுமார் 500 மில்லியன் இ-மெயில்கள் பிடிஎப் ஃபைல்களின் இணைப்புடன் கணினிகளை தாக்கியது. அமெரிக்காவில் உள்ள ஊர் பேர் தெரியாத ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குமாறு அந்த மெயில் அனைவருக்கும் பரிந்துரை செய்தது. அந்த ஒரு நாளில் மட்டும் உலக அளவில் ஸ்பாம் மெயில்களின் போக்குவரத்து 30 சதவீதம் அதிகரித்திருந்தது. மோசடி ஆசாமிகள் குறிப்பிட்டிருந்த அந்த பங்குகளின் விலை இந்த ஸ்பாம் மெயில்களுக்கு பிறகு 60 சதவீதம் அதிகரித்ததாம். ஆனால் முடிவில் இந்த ஊழலுக்கு முந்தைய விலையில் சற்றே அதிகரித்து, அதாவது ஒரு 10 சதவீத விலை மட்டுமே அதிகரித்து நிறைவடைந்ததாம். ஆனால் இந்த குறிப்பிட்ட சில மணி நேரங்களில் இந்த மோசடி ஆசாமிகள் சில மில்லியன் டாலர்களை சுருட்டிவிட்டனர். சரி எவ்வாறு இந்த இ-மெயில் முகவரிகள் கிடைக்கிறது? இதற்கு என்ன செலவு ஆகும்? போன்ற கேள்விகள் நம் முன் எழுவது நியாயமே. 100 டாலருக்கு, அதாவது ரூ.4,100-க்கு 1 மில்லியன் இ-மெயில் முகவரிகளைப் பெற்றுவிடலாம். இந்த மெயில்களை அந்தந்த இ-மெயில்களுக்கு அனுப்ப 500 டாலர் அதாவது சுமார் 20,500 ரூபாய் செலவில் ஒரு வைரஸ், இதனை அனுப்ப சர்வர்களுக்கு ஆகும் செலவு மேலும் ஒரு 500 டாலர். அதாவது ஒரு அரை லட்ச ரூபாய் செலவில் மிகப்பெரிய மோசடியை நடத்தி விட முடியும். ஆனால் இந்த கிரிமினல்கள் அடையப்போகும் லாபமோ மிகப்பெரியது. இதில் வேடிக்கை என்னவெனில் எந்த நிறுவனத்தின் பங்குகளை வைத்து இந்த விளையாட்டு ஆடப்பட்டதோ அந்த நிறுவனத்திற்கே இந்த விளையாட்டு தெரியாமல் இருந்திருக்கிறது. இந்த மெயில்களில் வரும் இணைப்புகள் பிடிஎஃப் வடிவமைப்பில் இருக்கும். இனிமேலும் பிடிஎஃப் வடிவமைப்பில்தான் பெரும்பாலும் வரும் என்று ஒரு இணையதள ஸ்பாம், வைரஸ் பாதுகாப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது. ஏனெனில் பிடிஎஃப் வடிவம் நமக்கு உண்மையானது என்ற தோற்றத்தை ஏற்படுத்தி விடும். பலவேளைகளில் கவர்ச்சிகரமான இமேஜ் வடிவமைப்பிலும் இந்த மெயில்களின் இணைப்புகள் இருக்கும். அதாவது அதை நாம் திறந்தேயாகவேண்டும் என்ற தூண்டுதல் இருக்கும். ஆனால் இமேஜ் பாணி தற்போது மறைந்து வருவதாக மற்றுமொரு செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. எந்த ஒரு பிடிஎஃப் வடிவமைப்பாலும் வாசிக்கப்படக்கூடிய ஃபார்ம்ஸ் டேட்டா ஃபார்மேட் (Forms Data Format) என்பது இப்போது இந்த ஸ்பாம் ஆசாமிகளால் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருவதாக ஃஎப் செக்யூர் என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரு நிறுவனத்தின் பாலன்ஸ் ஷீட் போன்ற தோற்றத்தில் இருக்குமாம். ஐ.டி.சி (IDC) வெளியிட்டுள்ள முக்கியமான புள்ளி விவரத்தின் படி ஒரு நாளில் பரிமாறிக்கொள்ளப்படும் 97 பில்லியன் இ-மெயில்களில் 40 பில்லியன் மெயில்கள் ஸ்பாம் மெயில்களே. தினமும் நமது மெயில் பாக்ஸ்களில் நாம் இதுபோன்ற குப்பை மெயில்களை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம் அழித்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் இதற்கு வணிக ரீதியாக வழங்கப்படும் தீர்வுகள் 100 சதவீதம் திறன் படைத்ததாக இல்லை என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. ஸ்பாம் மெயில்களால் இன்டர்நெட் பான்ட் வித் கடுமையாக வேஸ்ட் ஆவது என்னவோ தினசரி உண்மைதான். எனினும் நம்பிக்கை இல்லாமல் இல்லை. கலிபோர்னியா பல்கலைக் கழக ஆய்வாளர்கள் இது பற்றி கூறுகையில் குறிப்பிட்ட சில ஸ்பாம் சர்வர்களிலிருந்தே இது போன்ற தேவையில்லாத மற்றும் மோசடி மெயில்கள் கிளம்புகின்றன. ஒரு ஸ்பாம் மெயிலின் தடத்தை பிடித்து அது உற்பத்தியாகும் இடம் தெரிந்து விட்டால்போதும் அனைத்தையும் பிடித்து விடலாம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். |